கோவை: பஸ் ஸ்டாண்ட்களில் நிற்கும் அரசு பேருந்துகளில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து செல்பி, டிக்டாக் வீடியோ எடுக்கும் நபர்களால் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் முக்கியமான பேருந்து நிலையங்களில் 10 நிமிடங்கள் வரை நிறுத்தப்படுகின்றன. அப்போது பேருந்தை அதற்குரிய ரேக்கில் நிறுத்திவிட்டு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உணவருந்த செல்கின்றனர். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ளும் சில சேட்டை வாலிபர்கள் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பேருந்தை இயக்குவதை போல் செல்பி எடுத்தும், டிக் டாக் வீடியோவும் எடுக்கின்றனர். கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஈரோடு முதல் பாலக்காடு வரை செல்லும் உக்கடம் 1 கிளையை சேர்ந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து டிக் டாக் மற்றும் செல்பி எடுக்கும் வாலிபரின் செயல் வாட்ஸ் ஆப் குரூப்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு போக்குவரத்துகழகத்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள பிஎஸ்4 பேருந்து சென்சார் உள்ளிட்ட பல நவீன வசதிகளை கொண்டது. ஒட்டுநர் இருக்கைக்கும், இன்ஜின் பேனட் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஓட்டுநர் இறங்கும் கதவு வழியாக செல்லும் மர்ம ஆசாமிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். டிக் டாக் என்ற பெயரில் பேருந்தில் உள்ள பட்டனை அழுத்திவிட்டால் பேருந்து இயங்க தொடங்கிவிடும். பின் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பேருந்து நிற்கும் போது வாகனத்தின் சாவியை எடுத்து செல்லவும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்த கூடாது என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்கடம் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்,’’ என்றனர்.